×

11 ஏக்கர் நிலத்தை வாங்கியதில் மோசடி தலித் விவசாயியை ஏமாற்றி பாஜவுக்கு ரூ.10 கோடி தேர்தல் பத்திரம்: அதானிக்கு நெருக்கமான கம்பெனியின் தில்லாலங்கடி

புதுடெல்லி: மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடி திட்டத்தின் மூலம் கொள்ளை லாபம் பெற்ற அரசியல் கட்சி பாஜதான். உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தேர்தல் பத்திர ரகசியங்கள் அம்பலமாக, மொத்த தேர்தல் பத்திரங்களில் ரூ.8250 கோடி பாஜவுக்கு கிடைத்தது தெரியவந்தது. ஈடி, ஐ.டி., சிபிஐ மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பாஜவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி குவித்தது எஸ்பிஐ வெளியிட்ட தரவுகளை ஆய்வு செய்ததில் தெரிந்தது.

இந்த நிலையில், குஜராத்தில் அப்பாவி தலித் விவசாயியின் குடும்பத்திடம் நிலம் வாங்குவதுபோல் ஏமாற்றி , அவர்களை பாஜவுக்கு ரூ.10 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் அதானி குழுமத்துக்கு நெருக்கமான வெல்ஸ்பன் நிறுவனம் தர வைத்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம்: குஜராத்தை சேர்ந்த வெல்ஸ்பன் குழுமம், அதானி குழுமத்துடன் மிக நெருக்கமாக உள்ளது. அதானியும், வெல்ஸ்பன் குழுமமும் இணைந்து நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் அஞ்சார் பகுதியில் புதிய தொழில் தொடங்க பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கியது வெல்ஸ்பன் நிறுவனம். அஞ்சார் பகுதியை சேர்ந்தவர் ஹரேஷ் சவகரா(41). தலித் விவசாயி. இவரது குடும்பத்துக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை வெல்ஸ்பன் நிறுவனம் கடந்த ஆண்டு தொழில் தொடங்குவதற்காக விலைக்கு வாங்கியது. மொத்தம் ரூ.16.61 கோடிக்கு நிலம் விற்பனையானது. இதில், ரூ.2.80 கோடி முன்பணமாக தரப்பட, மீதமுள்ள ரூ.13.81 கோடியை ஹரேஷ் சவகரா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், மொத்தம் ரூ.11 கோடிக்கு சவகரா குடும்பம் சார்பில் தேர்தல் பத்திரங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கப்பட்டன. இதில், ரூ. 10 கோடியை பாஜவும், ரூ.1 கோடியை சிவசேனா கட்சியும் பணமாக்கி உள்ளன. தேர்தல் பத்திர திட்ட விவரங்களை ஆய்வு செய்த பத்திரிகையாளர்கள் சிலர் இது பற்றி ஹரேஷ் சவகராவை சந்தித்து விளக்கம் கேட்க அவர் அஞ்சார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

எங்கள் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.16.61 கோடி கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருந்தோம். அப்போது, என்னையும் என் தந்தையையும் வெல்ஸ்பன் நிறுவன விருந்தினர் விடுதிக்கு அழைத்து அந்த நிறுவன அதிகாரி மகேந்திர சிங் சோதா பேசினார். அப்போது, நகர பாஜ தலைவர் ரஜினிகாந்த் ஷா உடனிருந்தார். இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் வைத்திருந்தால் ஐ.டி ரெய்டு வரும் என்று மிரட்டினார்.

ரெய்டில் இருந்து தப்பிக்க தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள், நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார். இதனால், அதற்கு சம்மதித்தோம். இப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. எங்களை ஏமாற்றி பாஜவுக்கு நிதி கொடுக்க வைத்த வெல்ஸ்பன் நிறுவன இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. தலித் விவசாயி குடும்பத்தை ஏமாற்றி பாஜவுக்கு நிதி வசூலித்த விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* வங்கி டெபாசிட் பத்திரம் என்று நினைத்து சம்மதம்
விவசாயி ஹரேஷ் சவக்கரா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வங்கி டெபாசிட் பத்திரத்துக்கும் தேர்தல் பத்திரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியவில்லை. இதனால்தான், அவர்கள் செலுத்தும் பணம் ஒன்றரை மடங்காக திரும்பி வரும் என்று வெல்ஸ்பன் நிறுவனத்தினர் சொன்னதை நம்பி தேர்தல் பத்திரம் வாங்க சம்மதித்துள்ளனர். நாங்கள் படிப்பறிவற்றவர்கள் என்பதால் ஏமாந்துவிட்டோம் என்று ஹரேஷ் தெரிவித்தார்.

* நிலம் வாங்கியதிலும் மெகா மோசடி
விவசாயி ஹரேஷ் குடும்பத்தினரின் 11 ஏக்கர் நிலத்துக்கு குஜராத் அரசு முதலில் ரூ-76 கோடியை விலையாக நிர்ணயித்தது. ஆனால், அந்த தொகையை தர வெல்ஸ்பன் நிறுவனம் மறுத்துவிட்டது. ஓராண்டுக்கு பிறகு கட்ச் மாவட்ட சப் கலெக்டர் தனது அதிகார வரம்பை மீறி நிலத்தின் மதிப்பை ரூ.16.61 கோடியாக முறைகேடாக குறைத்ததாக சவகரா குடும்பத்தின் வழக்கறிஞர் புகார் கூறியுள்ளார்.

The post 11 ஏக்கர் நிலத்தை வாங்கியதில் மோசடி தலித் விவசாயியை ஏமாற்றி பாஜவுக்கு ரூ.10 கோடி தேர்தல் பத்திரம்: அதானிக்கு நெருக்கமான கம்பெனியின் தில்லாலங்கடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Dhillalangadi ,Adani ,New Delhi ,Modi government ,Supreme Court ,
× RELATED அதானி, அம்பானி குறித்து பேச்சு மூலம்...